Wednesday, December 12, 2012

Half Day IJTHIMA

IJTHIMA -- On 2012-12-25 (4pm-9pm) SCHOOL Naangalla Bayan by; *A.HAMEED Sharaee *RASMY SHAHID Ameeni *MURSHID Abbasi *ARHAM Ihsani

Thursday, October 4, 2012

சமய நல்லிணக்கத்துக்கு உழ்ஹிய்யாவை பயன்படுத்துவோம்..!



எம்.ஜே.எம். தாஜுதீன்

ஹஜ் பெருநாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ‘உழ்ஹிய்யா’வை நிறைவேற்றுவது தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஓர் அச்ச உணர்வு மேலோங்கியிருப்பதை எவரும் மறுத்திடமுடியாது.

கடந்த காலங்களில் உழ்ஹியா தொடர்பில்  முஸ்லிம்கள் அனுபவித்த கசப்பான சம்பவங்களே இதற்கான காரணங்களாகும்.

முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாள் காலத்தில் குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு மகா சங்கத்தினரோ- பெளத்த மத குருமாரோ எதுவிதமான இடைஞ்சல்களையும் செய்ய மாட்டார்கள் என்று ஜனாதிபதியின் பெளத்த மத விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் கலகம தம்ம ரன்ஸி தேரர்  அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.


எனினும் கண்டி மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள- கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இறைச்சிக்காக ஆடு மாடுகளை அறுப்பதை தடை செய்யும் பிரேரணை முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே நடவடிக்கையை இலங்கையின் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் பின்பற்றினால் முஸ்லிம்களின் உழ்ஹிய்யா- அகீகா- நேர்ச்சை போன்ற சமயக் கடமைகளை நிறைவேற்றுவது  கேள்விக்குரியாகிவிடும்.

இதன் காரணமாக முஸ்லிம்கள் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் உரிமைகள் கோரி நீதி மன்றங்களை நாடவேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.

முன்னேப்போதும் இல்லாத அளவில் இன்று முஸ்லிம்களுக்கு இனரீதியான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. அவர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுகின்றன. சில ஊடகங்கள் கண்மூடித்தனமாக முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட பொய்ப்பிரசாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன. 

இவ்வாறான கால கட்டத்தில்தான் முஸ்லிம்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். திடீரென உணர்ச்சிவசப்பட்டு முன்யோசனையற்ற செயல்களில் இறங்கி பிரச்சினைகளை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

ஹஜ் பெருநாள் தினங்களில் நாம் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவை பிறமத்தவர்கள் வெறுப்புடன் நோக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஹஜ் பெருநாளையொட்டி குர்பான் கொடுக்கும்போது சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாற்று மதத்தவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படும் விதத்தில் ஆடு-மாடுகளை பொது இடங்களில் வைத்து அறுத்தல்- அவற்றின் கழிவுகளைப் பொது இடகளில் வீசுதல்- ஆடு- மாடுகளை சட்டவிரோதமாக ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் போன்ற விடயங்கலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. 

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பள்ளிவாசல் நிருவாகிகள் இது விடயத்தில் அதிக கவனம் செலுத்தி தமது பிரதேச மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஏனைய மதத்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் இஸ்லாமிய ஒழுக்க முறைகளைப் பேணி இம்முறை முஸ்லிம்கள் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற வேண்டும்.

ஏனைய மதங்களில் உள்ளதுபோல் இறைவனின் பெயரால் மிருகங்களை அறுத்துப் பலியிடும் நடைமுறை இஸ்லாத்தில் இல்லையென எவரும் கூறிவிட முடியாது.

ஹஜ் கடமைக்காக 30 லட்சம் மக்கள் புனித மக்காவில் கூடினார்கள் என்றால் அங்கு ஏறக்குறைய அதே லட்சக் கணக்கில் மிருகங்கள் அறுத்துப் பலியிடப்படவேண்டும்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தாம் கண்ட கனவை உண்மைப்படுத்துவதற்காக தம் மகனையே இறைவனுக்காக அறுத்துப் பலியிடத் துணிந்தபோது இறைவன் சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கிவைத்து அதனை அறுத்துப் பலியிடுமாறு உத்தரவிட்டான்.

எனவே அல்லாஹ்வுக்காக மிருகங்களை அறுத்துப் பலியிடுவது இறை கட்டளையாகும். அதனை இறைவனே மனிதருக்கு கற்பித்தான். இதனை இறைவன் திருக்குர்ஆனில் -

“ உமது றப்புக்காக தொழுது- அறுத்துப் பலியிடுவீராக!” (108:02) 

“ அதன் மாமிசங்களோ- அதன் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைந்துவிடுவதில்லை. எனினும் உங்களுடைய (பரிசுத்தத் தன்மையும் ) பயபக்தியும் தான் அவனை அடையும” (22:37) என்று கூறுகிறான்.

இந்த இறை கட்டளைப்படி நாம் நிறைவேற்றும் உழ்ஹிய்யாவை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கக் கூடாதென்ற ஒரு நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. எனினும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இதற்கான ஆதாரங்களைக் காண முடியவில்லை.

இது பற்றித் திருக்குர்ஆன் குறிப்பிடும்போது:

“அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு.மாடு. ஒட்டகம் முதலிய) கால்நடைப் பிராணிகளை அவனது திருநாமத்தைக்கூறி- குறிப்பிட்ட நாட்களில் அறுப்பதற்காகவும் அங்கு வருவார்கள். ஆகவே அவ்வாறு அறுக்கப்பட்டவைகளில் இருந்து நீங்களும் புசியுங்கள். ஏழைகள்- தரித்திரர்கள் முதலியவர்களுக்கும் கொடுங்கள்”. (22:28)

ஊழ்ஹிய்யாவைப் பொறுத்தளவில் அதன் இறைச்சியை இன்னார் இன்னாருக்கத்தான் கொடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. மாற்றமாக –  அதனை மற்றவர்களுக்கும் - கஷ்டப்பட்டவர்களுக்கும்- வறியவர்களுக்கும்- கேட்டவர்களுக்கும்-கேட்காதவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றது.

இறைச்சி கொடுபடக்கூடிய கஷ்டப்பட்டவர்கள்  வறியவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்கவேண்டும் என அல்லாஹ்வின் தூதர் நிபந்தனை விதிக்கவில்லை.

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் இடத்துக் ஒரு காபிர் வந்து இறைச்சி கேட்டால் அவருக்கு அதைக் கொடுக்கவேண்டும்.

“ அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதனைக் கேட்வர்களுக்கும் கேட்காதவர்களுக்கும் கொடுங்கள்- (அல் குர்ஆன் - 22:36)

கஷ்டப்படக்கூடிய ஒருவர் பிர மதத்தைச் சார்ந்தவரராக இருந்தால் என்ன காபிராக இருந்தால் என்ன அனைவருக்கும் கொடுக்கலாம் என்பதையே மேற்கூறிய ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நெருப்பை நெருப்பால் அனைக்க முடியாது. தண்ணீர் கொண்டுதான் அனைக்கமுடியும். அதுபோல் தீமையை தீமையைக் கொண்டல்ல- நன்மையைக் கொண்டு தடுத்துக்கொள்ள திருக்குர்ஆன் இப்படி வழிகாட்டுகின்றது.

'நன்மையும் தீமையும் சமமாகிவிடா.(ஆதலினால் நபியே தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உமக்கும் அவருக்குமிடையே உள்ள பகைமை மாறி உம்முடைய (கொடிய) விரோதி (அதே சமயத்தில்) உம்முடைய மெய்யான ( மிக நெருக்கமான) சினேகிதராகி விடுவார். (41:34)

புனித ரமழான் மாதத்தில் இப்தார் நிகழ்வுகளுக்கு  நாம் பிற மதத்தவர்களையும் அழைத்து அவர்களை கௌரவித்து இன நல்லுறவையும் சமய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளோம். இன்றைய கால கட்டத்தில் இது வரவேற்கத்தக்கது. இதே அனுகுமுறையை நாம் உழ்ஹிய்யாவின் போதும் பின்பற்றலாம்.

இறைச்சி உண்ணக்கூடிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உழ்ஹிய்யாவை பகிர்ந்தளிப்பதன்மூலம் இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வையும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்.

Sunday, September 30, 2012

DR. ZAKIR NAIK in Malaysia on 28 Sept 2012


Inline image 11

Inline image 1
Inline image 2



'முஸ்லிம்கள் தமது வரலாற்றை மறந்ததே பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்' - அபூபபக்கர் சித்தீக்



முஸ்லிம்கள் தங்களது  வரலாற்றை மறந்ததே அவர்கள் முகங்கொடுத்திருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்றும், அதனால் முஸ்லிம்கள் தம் வரலாற்றை அடிக்கடி மீட்டுப் பார்ப்பது அவசியம் என்றும்  ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா அமைப்பின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம்அபூபபக்கர் சித்தீக்(மதனி) நேற்று தெரிவித்தார்.

இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் பெரும்பான்மை இன மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும், புரிந்துணர்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டியது காலத்தின் அவசியத் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதியா அமைப்பினர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பறகஹதெனியவில் ஏற்பாடு செய்திருந்த இருநாள் தேசிய இஸ்லாமிய மாநாடு  (சனிக்கிழமை) அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் வைபவரீதியாக ஆரம்பமானது.  இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது அமைப்பின்  தலைவரான அஷ்ஷெய்க் அபூபக்கர் சித்தீக்(மதனி) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ்நாடு சென்னை தாருல் ஹுதா வெளியீட்டகத்தின் நிறுவுனர் அஷ்ஷெய்க் முப்தி உமர் ஷரீப், மதுரை அஹ்லுஸ் ஸுன்னா ஸ்தாபகர் அஷ்ஷெய்க் முஜிபுர்ரஹ்மான் உமரி, இந்தியாவின் ஜம்மிய்யது அஹ்லுல் ஹதீஸ் வல்குர்ஆன் அமைப்பின் மாநில துணைத் தலைவர் கோவை எஸ். ஐயூப், ஜாமியா நளீமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் உட்பட உள்நாட்டு வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து பெருந்தொகையான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.  

அஷ்ஷெய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக்(மதனி) இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில,

இந்நாட்டில் முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  நாம் பெரும்பான்மை மக்களுடன் எவ்வாறு ஒழுக்கமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவூட்டுவதையும் தெளிவுபடுத்துவதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக கொண்டே இம்மாநாட்டை   ஏற்பாடு செய்துள்ளோம். இதனையே காலத்தின் அவசிய தேவையாகவும் கருதுகின்றோம்.  

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் தொடர்பாகவும், தவறாகவும், பிழையாகவும் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.   இவ்வாறான சூழ்நிலையில் அவற்றை களைந்து இஸ்லாத்தின் மகத்துவத்தையும் புனிதத் தன்மையையும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சிறப்பையும் சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டியது எமது பொறுப்பாகும்.  இதனை முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மாற்று மத மக்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.  இதற்கு பொறுமை, சகிப்புத் தன்மை, அன்பு, கருணை ஆகியன மிகவும் இன்றியமையாதது.  முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையில் இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன.  அவற்றை நாமும் முன்மாதிரியாகக்; கொண்டு செயற்பட வேண்டும். 

முஸ்லிமாக இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் கொள்கையும், கோட்பாடும் மிக முக்கியமானது.  இதனையே அல்-குர்ஆனும்  வலியுறுத்துகின்றது. குறிப்பாக அல்-குர்ஆனில் 'இஹ்லாஸ்' என்ற அத்தியாயமும் இதனையே தெளிவுபடுத்துகின்றது. இந்த நான்கு வசனங்களைக் கொண்ட அத்தியாயத்தை முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முழுக் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமானது என்றார்கள்.   இஸ்லாம் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கவேயில்லை. அன்பும் பண்புமே இஸ்லாத்தின் பிரதான அம்சங்களாகும்.  இதனடிப்படையில் குர்ஆன், சுன்னாவைப் பேணி வாழ வேண்டும்.  இதுவே இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கான செய்தியுமாகும்.



முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க ஒன்றுபடுங்கள் - இஸ்லாமிய மாநாட்டில் தீர்மானம்





இக்பால் அலி

ஜமாஅத் அன்சாரில் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பினர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பறஹகதெனியவில் ஏற்பாடு செய்திருந்த இருநாள் வதிவிட இஸ்லாமிய தேசிய மாநாட்டில் 9 தீர்மானங்கள் தக்பீர் முழங்க  நிறைவேற்றப்பட்டன. இதனை முஹம்மதிய்யாவின் உண்மை உதய சஞ்சிகை ஆசிரியர் அஷ்ஷேய்க் எஸ். எச். எம்  இஸ்மாயீல் வாசிக்க பல்லாயிரக் கணக்கான மக்கள் தக்பீர் முழங்க தீர்மானங்கள் நிறைவேறின.

முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக மதிக்கும் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட 'இனசன் ஒவ் முஸ்லிம்'  என்ற குறுந்திரைப் படத்தயாரிப்பாளர்களையும், அதற்கெதிராகவும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அமெரிக்காவையும் அதன் வெளியிட்ட யூடிப் இணைய வலய நிருவாகிகளை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிருக்கிறது.

மேற்படி திரைப்படத்தை இலங்கை சனநாயக சோஸலிசக் குடியரசின் புத்தசாசன அமைச்சு இலங்கையில் தடை செய்தமைக்காக இம்மாநாடு புத்தசாசன அமைச்சுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நாட்டில் வாழும் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி வணக்கஸ்தலங்களின் உடைத்தல் அல்லது அவற்றுக்கு எதிராகச் செயற்பட்டு ஒற்றுமையைக் குலைக்க முயற்சி செய்யும் அனைத்து தீய சக்திக்கும் எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அவர்களது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக   அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அநீதிகளிலெல்லாம் மிகப்பெரிய அநீதியான ஷிர்க்கை ஒழித்து தவ்ஹீதை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டுமென உங்களை அனைவரையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட அனைத்து பித்அத்துக்களையும் மூட நம்பிக்கைகளையும் ஆனாச்சாரங்களையும் ஒழித்து தூய இஸ்லாத்தை நிலைநாட்ட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இஸ்லாத்தின் பெயரால் பிரிந்து கிடக்கின்ற இச் சமுதாயம் அல்குர்ஆன் சுன்னாவின் பெயரில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வட்டி, வரதடசனை, மது, சூது, கொலை. கொள்ளை, ஆபாசம், விபச்சாரம், சிறுவர் துஷ;பிரயோகம் போதைப் பொருட்கள் பாவனை போன்ற பெரும்பாவங்களிலிருந்து விலகிவாழ வேண்டும் என அனைவரையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பல்லின சமுதாயம் வாழும் இந்நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்கள் மாற்றுமத மக்களோடு நீதமாகவும் முன்மாதரியாகவும், மனிதநேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கொள்கைச் சகோதரர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் ஏனையோருக்கு முன் மாதரியாகத் திகழ வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது 

இம் மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்து  சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

முஹம்மதிய்யா அமைப்பின் பொதுத் தலைவர் அஷஷய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்தீக்(மதனி) தலைமையில் நடைபெற்ற இந்த இருநாள் மாநாட்டில் கைத்தொழில் அபிவிருத்தி, வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் பொதுத் தலைவர் அஷஷய்க் ரிஸ்வி முபத்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.ஏ.முபாரக் (மதனி) ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் அகார் முஹம்மத்,  ஜம்இய்யதுல் ஷபாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.றஷத், பிரதிப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம், அமைப்பின் இணைப்புப் பணிப்பாளர் சபர் சாலி, புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலீலுர்ரஹ்மான், நிதாஉல் ஹைர் அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க்க எஸ்.எல்.நௌபர், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி மௌலவி இம்றான், இலங்கை ஹிக்மா மன்றத்தின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.சேகுதீன் உட்பட குவைத், சவூதி அரேபியா, இந்தியா நாடுகளின் முஸ்லிம் அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


Wednesday, September 26, 2012

தினக்குரல் பத்திரிகை நிருவாகத்தினருடன் தவ்ஹீத் ஜமாஆத் ( SLTJ) சந்திப்பு



Rasmin m.i.sc

நபியவர்களை கேவலப்படுத்தி அமெரிக்கர்களினால் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சியின் புகைப்படங்களை தினக்குரல் பத்திரிக்கை கடந்த 22.09.2012 சனிக்கிழமை வெளியிட்டது. 

இது தொடர்பில் நேற்று (25.09.2012) மாலை தினக்குரல் அலுவலகத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் ஜமாத்தின் கண்டன அறிக்கையை பத்திரிக்கை நிர்வாகத்திற்கு கையளித்ததுடன் இது தொடர்பில் பகிரங்க மண்ணிப்பு கேட்காவிடில் ஜனநாயக மற்றும் சட்ட ரீதியில் ஜமாத் கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று (26.09.2012) காலை 11 மணிக்கு தினக்குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் பீடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்திப்பதற்கு விரும்புவதாக வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து ஜமாத்தின் தேசிய தலைவர் ஆர்.எம். ரியால் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் நிர்வாகிகளான ரிஸா, ரஸ்மின் உள்ளிட்ட குழுவினர் தினக்குரல் ஆசிரியர் பீடத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது உருவப்படங்கள் தொடர்பில் இஸ்லாத்தின் நிலைபாட்டையும், அனைவரையும் படைத்த அல்லாஹ்வுக்கோ அல்லது நபியவர்களுக்கோ இஸ்லாம் ஏன் உருவப்படத்தை ஏற்படுத்தவில்லை என்பது தொடர்பிலும் ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் தெளிவுபடுத்தினார்.

இஸ்லாமியர்களின் மனம் வேதனை அடையும் விதமாக தாம் வெளியிட்ட செய்தி தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்வதாகவும், நாளைய (27.09.2012) தினக்குரல் பத்திரிக்கையில் இது தொடர்பில் கவலை தெரிவிக்கும் ஆக்கத்தை வெளியிடுவதாக பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் ஜமாத் நிர்வாகத்திடம் உறுதியளித்தார்.

சந்திப்பின் இறுதியில் திருமறைக் குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை விளக்கம் போன்ற புத்தகங்களும் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியருக்கு வழங்கப்பட்டது.

தேசிய இஸ்லாமிய மாநாடு பற்றிய செவ்வி




ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் எதிருவரும் சனியும், ஞாயிறும் குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மைதானத்தில் தேசிய இஸ்லாமிய மாநாடு நடைபெறும். இம்மாநாடு பற்றி இவ்வமைப்பினூடாக இஸ்லாமிய மார்க்கப் பணி மற்றும் சமூகப் பங்களிப்பினை நல்கி வரும் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) வழங்கிய செவ்வி.

நேர்காணல் இக்பால் அலி

இம் மாநாடு நடத்துவதற்கான முக்கிய காரணம் என்ன?

இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டுகன்ற மார்க்கமாகும். அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் வழியிலமைந்த இவ்வாழ்க்கை நெறியினை ரசூல் (ஸல்) அவர்கள் சமுதாயத்திற்கு முன்வைத்து அதன் அடிப்படையிலேயே வாழ்ந்து காட்டினார்கள். ரசூல் (ஸல்) அவர்களது இவ் வழிகாட்டுதல்களை ஸஹாபாக்களும் பின்பற்றி மனித சமுதாயத்துக்கு ஒரு முன்மாதரிமிக்க வாழ்க்கை நெறி இஸ்லாம்தான் என்பதைப் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அற்புதமான, மனித வாழ்வின் நிம்மதிக்கு வழிகாட்டுகின்ற, ஈருலக பாக்கியமும் நிறைந்த சுவன வாழ்க்கைக்கு தம்மை தயார் படுத்துகின்ற வாழ்க்கை நெறி இஸ்லாம் தான் என்பதை எடுத்தியம்பி, அல் -குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் அடிப்படையில் ஓரணியில் ஒன்று கூடுவதற்கான முக்கிய மாநாடாக இதனைக் கொள்ளலாம்.

இவை மாத்திரமல்ல குர்ஆன் சுன்னா அடிப்படையில் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒற்றுமையாக வாழ்வதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தல் மற்றும் தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைப்பதுடன் இஸ்லாத்தைக் கலங்கப்படுத்தும் சமூகங்களுக்கு மத்தியில் தீய சிந்தனைகள், கொள்கை கோட்பாடுகளை இனங்காட்டுதல் மற்றும் இலங்கை வாழ் பல்லின மக்களிடையே முஸ்லிம்களை ஏனைய மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டுதல், சமூகங்களுக்கிடையே புரையோடிக்கிடக்கும் ஒழுக்க வீழ்ச்சியை எடுத்தியம்பி சீர் திருத்தப்பணியைமேற் கொள்ளல் போன்ற ஆரோக்கியமான பணி முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுவருகின்றோம்.

இஸ்லாதின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களுக்கிடையே வேற்றுமையை கருத்து முரண்பாடுகளையும் உருவாக்கி கரிபூசும் வகையிலேயே செயற்படுகின்றன.  இன்றைய உலகில் இஸ்லாத்திற்கெதிராக வரிந்துகட்டிக் கொண்டு அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் நிந்தனை செய்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் பாரிய அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு இந்தச் சந்தர்ப்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய முன்மாதரி என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு இடம்பெறவுள்ளது.  இது போன்று அவ்வப் போது எமது முஸ்லிம் சமுதாயம் எதிர் நோக்கும் பிரச்சினைக்கும் சவால்களுக்கும் தக்கபதில் வழங்கும் நிவாரணியாகவே எங்களுடைய இஸ்லாமிய அழைப்புப் பணி அமைந்துள்ளது.  

மேலும் இம் மாநாடு குறித்து ஈண்டு குறிப்பிட்டுச் சொல்லப் போனால் முஸ்லிம்களின் ஈமானிய  ஆத்மீக உணர்வைப் பலப்படுத்தி குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயற்படக் கூடியவார்களாக ஆக்கும் முக்கிய நோக்காகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டின் ஏற்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவீர்களா?

ஆம். இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் சுமார் 10000 பேர் தொழுதற்குரிய டென்ட் அடிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மிக அழகான மேடை அமைப்பு, ஒலி பெருக்கி வசதிகள், குறுந்தூர நேரடி வானொலி சேவை, இணையத்தளம் ஊடாக உலக மக்கள் பார்ப்பதற்கான நேரடி வீயோடி சேவை, வீடியோக் காட்சியினை மண்டத்திற்கு தூர இடங்களில் உள்ளவர்கள் தெளிவாக காண்பிதற்கு விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.  தங்குமிட வசதிகள், தண்ணீர் வசதி போன்ற சகல ஏற்பாடுகளும் நிறைவுபெற்றுள்ளன. வீடியோக் காட்சியினை பதிவு செய்வதற்காக இந்தியாவிலிருந்து விசேடமாக இங்கு வருகை தந்துள்ளார்கள்.

ஜமாஅத்த அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் தேசிய மாநாட்டை முன்னிட்டு ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா அணியினர் கிழக்கு, மேல், தென், வட மத்திய, வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா  போன்ற மாகாணங்களுக்கு விஜயம் மேற் கொணடனர். 

தேசிய இஸ்லாமிய மாநாட்டை வெற்றிகரமாக நடாத்த இலங்கையின் அனைத்துப் பகுதிகளில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளன. ஒவ்வொரு மாகாணங்களிலிருந்து  மக்கள் கலந்து கொள்ளவும் உள்ளனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள  குறிப்பிட்ட முக்கிய பிரதேசங்களில் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் சகல மாகாணங்களிலும் இம் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போது பிரதேசங்களில் மாநாடு பற்றிய விளம்பரம் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செயல்லப்பட வேண்டும். அதற்கான வாகன ஒழுங்கள் மேற்கொள்ளல், மாநாட்டுக்கு வர ஆர்வமிருந்தும் வர முடியாத சகோதரர்களை அழைத்து வர முயற்சி செய்தல், கூடுதலான விளம்பரப் பணிகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய். சிறாஜ்நகர், திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தோப்பூர் போன்ற இடங்களில் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் நிலாவெளி, குச்சவெளி. புடைவைக்கட்டு, புல்மோட்டை போன்ற பகுதிகளில் மாநாடு குறித்த விளம்பரங்களை தொடர்ந்து மேற்கொள்ளல் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஓட்டமாவடியை அண்மித்த கிராங்களான கஹவத்தமுளை, மீராவோடை, வாழைச்சேனை, நாவலடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கும் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முயற்சிகள் மும்முரமாக நடைபெறுவதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏறாவூரில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அங்கிருந்து பல எண்ணிக்கைனோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

காத்தான்குடியில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது காத்தான்டிப் பிரதேசத்தை மையப்படுத்தி ஆயிரக் கணக்கான சகோதரர்கள் வருகை தரவள்ளார்கள்.

அதனை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி கல்முனைக்குடிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட கூட்டம் நடைபெற்றது. இங்கு மருதமுனை, நற்பட்டிமுனை, கொலனி. கல்முனை, சாய்ந்தமருது. சம்மாந்துறை, இரக்காமம், நிந்தவூர், ஒலுவில், பாலமுனை. அட்டாளச் சேனை, அக்கறைப்பற்றறு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பிரதிதிநிதிகள் கலந்து கொண்டனர். இங்கிருந்தும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இங்கு குறிப்பாக மருதமுனை அக்பர் கிராமத்திலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இம்மாநட்டில் கலந்து கொள்வதற்;கு முன் கூட்டியே பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான வாகன ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கல்முனை சாயந்தமருதுப் பிரதேசங்களில்  கிழக்கு மாகாண சபைத்  தேர்தலுக்குப் பிற்பாடு இம்மாநாடு குறித்த சுவெரொட்டிகள் எங்கும் காணக் கூடியதாக உள்ளன. ஜும்ஆத் தொழுகையின் பிற்பாடு அங்குள்ள பள்ளிவாசல்களில் இது குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டன. மக்கள் பங்குபற்றுதலுக்கான  பெயர் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும்  மக்கள்  நாட்டின் பல பாகங்களிருந்தும் ஆர்வத்துடன் கலந்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளதாகவும் பெயர் பதிவுகளை வழங்கியதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்த வண்ணம்  உள்ளன.

தற்போது வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ள வெளிநாட்டு பிரமுகர்கள் யாவரும் சமூகமளித்துள்ளார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற பறகஹதெனிய வாழ் மக்கள் முதியோர், இளைஞர், சிறுவர்கள் எனப் பாராமல் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வெளியூர்களிலிருந்து வரும் மக்களை மிகுந்த அன்போடு அரவணைக்கத் தயாராகவுள்ளார்கள் என்பதை இங்கு விசேட குறிப்பிட வேண்டும்.

உங்கள் அமைப்பின் சமூகப் பணிகள் என்ன?

குருநாகல் மாவட்டம், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்த மிகப் பெரும் சீர்திருத்தவாதியும் சமூக ஆர்வலருமான அல்லாமா அப்துல் ஹமீத் பக்ரி றஹிமஹுல்லாஹ் என்பவரால் அதே கிராமத்தில் 1947 ம் ஆண்டு இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அது 65 வருடங்களுக்கு மேலாக செயற்படும் மிகப் பழமைவாயந்த அமைப்பாகும்.  அன்றிருந்து இன்றுவரை தங்கு தடையின்றி பல சவால்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றோம்.

இஸ்லாமிய அழைப்புப் பணி. பொதுக் கல்விப் பணி, சமூகப் பணி  என்ற அடிப்டையில் வரலாற்றில் மறக்கவோ மறைக்கவோ முடியாதளவுக்கு எங்கள் சாதனைகள் நிறைந்துள்ளன. கல்வி என்பது மிகப் பெரும் சொத்து. அது இல்லையென்றால் மனித இனமே இல்லை. இஸ்லாம் கல்வியை முன் நிறுத்துகிறது. இஸ்லாத்தின் சங்க நாதமே 'ஓதுவீராக' (படிப்பீராக) என்பதுதான். எமது வழிகாட்டியான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அளித்துள்ள இடம் வேறு எந்தத் தூதுவர்களும் மார்க்கங்களும் வழங்கவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அவர்கள் சொல்கிறார்கள்.
கற்பவனாக இரு அதாவது மாணவனாக இரு அல்லது கற்பிப்பவனாக இரு  அதாவது ஆசிரியனாக இரு அல்லது அதற்கு உதவுபவனாக இரு நான்காவது நபராக இருக்காதே இதன் மூலம் கல்வியின் பெருமை அதற்கு உதவுவது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பது புரிந்திருக்கும் அதனால்தான் இப்பணியை எமது தலையாய பணியாகக் கருதி செயற்படுகிறோம்.

எனவேதான் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கல்விப் பணி தொடங்கப்பட்டு அதற்;கு உதவுவதில் நாம் மிக முனைப்போடு செயற்பட்டு வருகிறோம்.

இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இந்த 65 ஆண்டு காலப் பகுதியில் இன்று நாம் அதில் பெரும் சாதனை படைத்திருக்கிறோம்.

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா என்ற நாமம் சூடி எமக்கென மூன்று கல்விக் கூடங்கள் உள்ளன. அதில் (1) பறகஹதெனியவில் அமைந்துள்ளது. ஏனைய இரண்டும் முறையே கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியில் ஒன்றும் அதே மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் ஒன்றும் இயங்குகிறது. இம்மூன்றிலும் மொத்தமாக 350 பிள்ளைகள் சமகாலத்தில் கவ்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எமது கல்விப் பணி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க செயற்பாடாகும்.

பல்கலைக் கழகங்களில் கற்கும் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், வர்த்தகம், சட்டம், கலை ஆகிய சகல துறைசார்ந்த வறிய மாணவ மாணவிகளுக்கும் புலமைப் பரிசில் நிதி வழங்கி வருகிறோம். இதுவரை சுமார் 300 மாணவ மாணவிகள் இவ்வாறான உதவிகள் பெற்று தமது படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள். உண்மையில் இது ஒரு சிறந்த நல்தொரு செயற்பாடாக நாம் கருதுகிறோம். எத்தனையோ பேர் வறுமையின் விளிம்பில் நின்று தமது பட்டப்படிப்பை முடிக்க வழிதெரியாது கைவிடும் நிலையில் இருந்தவர்களை இறைவன் அருளால் அவர்களை கரை சேர்த்து விட்டிருக்கிறோம்.

தந்தையை இழந்த அநாதைப் பிள்ளைகளுக்கு அவர்கள் க.பொ.த. உயர் தரம் படித்து முடியும் வரை தனியாக ஒரு திட்டத்தை அமுல்படுத்தி வருகிறோம். இப்பிரிவில் முழு இலங்கையிலும் சுமார் 1500 பிள்ளைகள் தற்போது பராமரிப்பிலுள்ளார்கள். ஆண் பெண் வித்தியாசமின்றி செய்யப்படுகின்ற இப்பணி மூலம் இதுவரை சுமார் 600 பிள்ளைகள் பலனடைந்துள்ளர்கள்.

புத்தகங்கள் வழங்கி நூல் நிலையங்களின் வளர்ச்சிக்கு உதி வருகிறோம். க.பொ.த. சாதாரண தரம், உயர் தரம், 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய வகுப்புகளுக்கு கருத்தரங்குகளை நடாத்துவது. கல்வி விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வது. அதேபோல் சமூகப் பணிகள் என எடுத்துக் கொண்டால் சமூகப் பணியும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்துள்ள ஒரு விடயம்தான். ஒரு முறை காலில் செருப்பில்லாத தலைக்கு எண்ணெய் இட்டிராத மிக அழுக்கடைந்த ஆடைகளுடன் நபிகள் நாயகத்தின் முன்னிலையில் ஒரு கூட்டம் வந்தபோது இதனைக் கண்டு கொதித்தெழுந்து விட்டார்கள் அவர்களது முகம் மாறிவிட்டது. இதற்கு உடனடி பரிகாரம் செய்யும் நோக்குடன் தன்னைச் சூழ இருந்தவர்களிடம் தர்மத்தைப் பற்றிக் கூறி உடனடியாக நிதி திரட்டி நிவாரணமளித்தார்கள்.

எனவே, அல்குர்ஆனும் நபிகளாரின் சுன்னாவும் வலியுறுத்தும் சமூகப் பணியையும் எம் தலைமேல் சுமந்து கொண்டோம். அதுவும் இயற்கை அனர்த்ததங்கள் அடிக்கடி இடம் பெறுகின்ற இக்காலகட்டத்தில் அது மிக இன்றியமையாத ஒன்றாகும்.

சமூகப் பணிகள் ஏராளம் உண்டு. அனைத்தையும் கூறி முடிக்கின்ற அளவு இங்கு அனைத்தையுயும் சொல்லி விட முடியாது.  ஒரு சிலதை தொட்டுக் காட்ட விரும்புகிறேன். தேவை ஏற்படும் பட்சத்தில் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் அரச அங்கீகாரத்தோடு சகல விடயங்களும் நன்கு ஆராயப்பட்ட பின் பள்ளி வாசல்களை அமைத்து வருகிறோம். இதே ஒழுங்கமைப்பில் எந்தவித குறையுமின்றி அல்குர்ஆன் கற்பிக்கும் மத்ரஸாக்களை நிறுவி வருகிறோம். ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம். இதுவும் ஒரு பிரதான சமூகப் பணியாகும். குழாய்க் கிணறுகள், ஆழக்கிணறுகள், நீர்த்தாங்கியுடன் கிணறுகள், வீட்டுக் கிணறுகள், பாடசாலை, வைத்திய சாலைக் கிணறுகள் என்று கிணற்றின் பட்டியல் மிக நீளமானது. மழை, வரட்சி, குறிப்பாக சுனாமி போன்றவற்றால் ஏற்படும் அனர்த்தங்களின்போது உணவு, உடை, மருத்துவம், நிதி உதவி என்று பல்வேறு வகைகளில் எவ்வித பாரபட்சமும் பார்க்காது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உதவி வந்திருக்கிறோம். இனிமேலும் தொடர்ந்து உதவுவோம் இன்ஷhஅல்லாஹ். காலத்திற்கேற்றவாறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றபோது அதற்கேற்றவிதமாக மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சையளித்து வருகிறோம் சமூகப் பணியை இஸ்லாம் அம்மதத்து மக்களுக்குரிய பணியாக எப்போதும் கூறியதில்லை. பொதுவாக மனித நேயத்தைப் பற்றியும் மனிதத்துவம் பற்றியும் கூடுதலாகப் பேசுகின்ற மார்க்கம் இஸ்லாம். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கு நல்லதொரு உதாரணம் அல்குர்ஆன் உங்களை ஒரே........ என்று சொல்கிறது.

அந்த வகையில் எமது சமூகப் பணி மதம், சாதி, இனம் ஆகியவற்றிற்கு அப்பால் சென்று அனைவரையும் ஒரே குடும்பமாகவே நோட்டமிடுகிறது.

இங்கு குறிப்பாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது புலிகளுடனான கடைசி யுத்தத்தின்போது இடம் பெயர்ந்த மக்களுக்கு அதிலும் குறிப்பாக மெனிக் பாம் முகாம் மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக எமது சேவை வழங்கப்படிருந்தது.சுனாமியின்போது மட்டக்களப்பு ஓட்டமாவடி சலவைத் தொழிலாளர் மக்களுக்கு நாங்கள் அளித்த உதவிகளை அவர்கள் இன்றும் நினைவு கூர்வார்கள். மாவத்தகமை பிரதேச வைத்தியசாலைக்கு நீர் விநியோகத் திட்டத்தை முழுமையாக செய்து கொடுத்திருக்கிறோம். வன்னி மாவட்டம் வவுனியா காக்கையன்குளம் கிராமத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு வெள்ள அனர்த்தத்தின்போது நிவரணங்கள் வழங்கப்பட்டன.

சமூக உணர்வு இல்லாதவன் மனிதம் இல்லாதவன் என்பார்கள் அந்த உணர்வு வெறுமனே வெளிப்பாடாக இன்றி உண்மையானதும் இதய சுத்தியுடனும் இருத்தல் வேண்டும் என்தற்கு ஏற்ப நாங்கள் முழு மூச்சாக நின்று செயற்பட்டு வருகின்றோம் என்றும் சொல்லலாம்

Tuesday, September 25, 2012

முஸ்லிம் சகோதரர்களே..! தர்மம் உங்களைக் காக்கும்




(திவைன 2012.09.25 செவ்வாய். ஆசிரியர் தலையங்கம்) 

தமிழில் ஜெஸா

இஸ்லாம் சமயத்தை நிந்தனை செய்யும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் காரணமாக உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம் சகோதரர்களின் மனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்திலே உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள முஸ்லிம்கள் முன்சொன்ன திரைப்படத்துக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இங்கு சிறு நினைவூட்டல் ஒன்று அவசியம். அதாவது இது அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட திரைப்படமன்று அமெரிக்க பிரஜையால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதாகும். இத்திரைப்படம் இன்றும் இணையத்தில் யு ரியுப் தளத்தில் உள்ளது. எவ்வளவு தான் பெரிய பொலிஸ் அதிகாரம் இருப்பினும் இணையத்துக்கு சென்ற ஒன்றை திரும்ப பெற முடியாது. இணையத்தளத்தை தடைசெய்தாலும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்கள் இருந்தால் ஒன்றுமே செய்யமுடியாது. தொழிநுட்பத்தை கடந்து செல்ல தொழிநுட்பத்தால் முடியும். உலகம் பூராவும் தடைசெய்யப்பட்டுள்ள விகிலீக்ஸ் இணையத்தளம் proxy ஊடாக அல்லது மாற்று பிரவேசங்கள் ஊடாக பார்வையிட முடிகிறது. எமது புரிதல் என்னவென்றால் இஸ்லாத்தை நிந்தனை செய்யும் திரைப்படத்தை தயாரித்த நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டு இறைநிந்தனைச் (Blasphemy) சட்டத்தின் கீழ் அவனுக்கு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உலகம் பூராகவுமுள்ள முஸ்லிம் சகோதர்களை இவ்வாறான நடவடிக்கை ஒன்றின் மூலமாகவே அமைதிப்படுத்த முடியும்.

இஸ்லாம் சமயம் என்பது அதனைப் பின்பற்றுபவரால் நூற்றுக்கு நூறு பின்பற்றப்படும் சமயமாகும். அந்த சமயம் மிகவும் ஒழுக்கமானது. அதனால் அதில் ஒருவித கடுமைத் தன்மையும் உண்டு. இஸ்லாத்தை பின்பற்றுபவர் தினத்துக்கு ஐவேளை தொழுவார். அவர் நுகர்வது சமயத்தினால் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மாத்திரமே. (இந்து சமயத்தின் சில பிரிவினர் நிலத்தின் கீழ் காணப்படும் கிழங்கு வெங்காய வகைகளை உட்கொள்ளமாட்டார்கள்.) பெண்கள் தொடர்பாக அவர்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஒழுங்குகள் மிக கடுமையானவை. அதுமட்டுமன்றி அவர்களின் உடை தொடர்பான சட்டங்களும் கூட கடுமையானவை. தர்மத்தை பின்பற்றுபவர் தர்மத்தினால் காக்கப்படுவார் என்பது முஸ்லிம் தனது சமயத்தை உரிய முறையில் பின்பற்றுவதனால் அதன் மூலம் தான் காக்கப்படுவேன் என்ற பின்னணியை கருத்தில் கொண்டாகும்.

இவ்வாறான சமயத்தை தாக்கும் போது அவர்களுக்கு மிகவும் வலிக்கும். அவர்கள் மிகுந்த கோபத்துடன் நாடுகளை ஆட்டங்காணச் செய்வதற்கு தயாராவது அதனாலாகும். முஸ்லிம் நாடுகள் படிப்படியாக மேற்கத்தேயத்தில் ஊறிப்போவதைக் கண்ட முஸ்லிம் சமூகம் கவலையடைநது அந்த நாடுகளை மீண்டும் புனித இஸ்லாமிய முறைமையினுள் பிரவேசிக்கச் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேற்கத்தேயத்தில் ஊறிப்போன எகிப்து இன்று நூற்றுக்கு நூறு இஸ்லாமிய பாரம்பரியத்தை பாதுகக்கும் நாடாக மாறியுள்ளது. லிபியாவில் விடுதலைப் பிரிவின் ஒரு பகுதியினர் கடினமான கொள்கைகொண்ட முஸ்லிம்களாவர். தலிபான் அமைப்பை அடிப்டைவாத குழுவாக மேற்கத்தேயர்கள் கூறினாலும் அந்த சமூக அமைப்பினுள் தலிபான் அமைப்புக்கு அங்கீகாரமுள்ளது. மேற்குலகம் எதிர்பார்ப்பது என்வெனில் தம்மைப்போல் உலகின் ஏனைய நாடுகளும் நிர்வானமாக இருக்க வேண்டும் என்றாகும். அவ்வாறில்லாத நாடுகள் தீவிரவாதிகள்: அடிப்படைவாதிகள்: மரபார்ந்தவர்கள்: இறுதியாக யுத்தக் குற்றவாளிகளாவர்.

என்றாலும் நாம் எமது முஸ்லிம் சகோதரர்களிடம் வேண்டுவது, இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் வன்முறைகளுக்கு முயற்சிக்காமல் அமைதியாக இருக்கும்படியாகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் இலங்கை அன்னையின் புதல்வர்களாவர். அந்த புதல்வர்கள் துயரப்படும் போது, போராடும் போது அழிவடைவது இலங்கை அன்னயின் உடமைகளாகும். இலங்கை அன்னையின் காலமாகும். முஸ்லிம் விரோத திரைப்படம் தயாரித்த நிந்தனைவாதியை கைதுசெய்து கடுமையான தண்டனை வழங்கும்படி அமெரிக்க அரசாங்கத்திடம் வேண்டுகிறோம். அமைதிக்கு முன்னுரிமை வழங்குங்கள். தர்மத்தை பின்பற்றுபவர் தர்மத்தால் பாதுகாக்கப்படுவார்.

(இலங்கைத் திருநாட்டின் இப்படியான  சூழ்நிலையில் இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணெத்தை ஏற்படுத்தும் விதமாக இப்படியான ஆசிரியர் தலையங்கத்தை எழுதிய திவயின சிங்கள நாளிதழின் கண்ணியத்திற்குறி ஆசிரியர் அவர்கற்கு எனது சமூகத்தின் சார்பில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.) - அபூ தர்வேஷ்.

Mercy to Mankind

Saturday, September 15, 2012

எமது ஜமாஅத்தின் தேசிய மாநாடு

முழுக்க முழுக்க தஃவா நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட ஜமாஅத் அன்ஸார் ஸுன்னா முஹம்மதிய்யா அமைப்பு இன்று தஃவாவை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு செயட்படுவது உலகறிந்த விடயம். இந்த காலகட்டத்திலே இப்படியான ஒரு இஜ்திமா ஒன்று ஏற்பாடு செய்திருக்கின்றமை மக்களைத் திறுப்திப்படுத்தவா? அல்லது அல்லாஹ்வைத் திறுப்திப்படுத்தவா? என்று தான் புரியதில்லை. அல்லாஹ் போதுமானவன். 

Tuesday, August 28, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!


ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் பேராசிரியர்!




Prof, Robert F. Shedinger



உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக்
கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப்
பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் பேராசிரியர்
ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் திட்டவட்டமாகத்
தெரிவித்துள்ளார்


Was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர்
இதனைத் தெளிவுபடுத்துகிறார். இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர்
நூலைத் துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான
பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.

மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி
எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர
மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார். “இஸ்லாம் மார்க்கத்துடன்
தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர்
சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராயத்
தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.

ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது:

‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும்
மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது.
இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக
அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது
நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு
முஸ்லிம் என நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார
பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.

வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன்
பின்னர் அவர் தனது உண்மையைத் தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ்
சேனல் கூறுகிறது. ஏசு முஸ்லிமா? இல்லையா? என்பதை ஆராய நீண்ட ஆய்வு
இவருக்கு தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே
தருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ஒரு
முஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இரண்டாவது
கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் கொள்வீர்கள்.

இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய தூதர்தான

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான்
பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை
அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். [ யோவான் 12:49 ]

இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :

20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்
பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு
அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது
வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று
உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள்
குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார்.
அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.

23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான்
பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்;ஆனாலும், என் வலது
பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால்
எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல்,
மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
[மத்தேயு 20 : 20 முதல் 23 வரை]

தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :

அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை
அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்; அதற்கு
அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன்
ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக்
கைக்கொள் என்றார்.
[மத்தேயு 19 : 16, 17 ]

நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையைக் கைக்கொள்ள வேண்டும்
என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு,
அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து:
கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.

29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை
எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே
கர்த்தர்.

30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு
ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக
என்பதே பிரதான கற்பனை.
[ மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை ]

இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே
பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே!
கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது
நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே
பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்
செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச்
சொல்லுவேன்.

24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல்
அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி
செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின
புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த
வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது
என்றார்.

28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல்
போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால்,

29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
[மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை ]

மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த
சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள்
காட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த
வசனங்களைப் படித்தாலே இயேசு ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய
ஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது
தெரிகின்றதா? இல்லையா?

இதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் படியுங்கள்.
இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் தெளிவாகும். இதைத்தான்
நீண்டஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் கண்டுபிடித்துள்ளார். 


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்....

1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
2.அல்லாஹ் தேவைகளற்றவன்.
3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
4.அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்குர்-ஆன் : அத்தியாயம் : 112

இலங்கை தஃவா இயக்கங்கள் குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டுகின்றன




 - மௌலவி முபாரக்




ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நமது நாட்டில் தப்லீக், தவ்ஹீத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்கத் என பல ஜமாஅத்துக்கள்- அமைப்புக்கள் சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. அப்படி இருந்தும் இந்தச்சிறிய நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்கள் இஸ்லாத்தையும், தொழுகையையும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்றால் இந்த இயக்கங்கள் இது கால வரை குண்டுச்சட்டிக்குள் வண்டியோட்டி வந்துள்ளன என்றே தெரிகிறது.

மேற்படி ஜமாஅத்துக்கள் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தின் சில சில பகுதிகளை பிரித்தெடுத்துக்கொண்டு அவற்றை பிரச்சாரம் செய்வதில்தான் காலம் கடத்தியுள்ளனரே தவிர இஸ்லாத்தின் தஃவாவை மற்றவர்களிடம் எத்தி வைக்கவேயில்லை என்பது வெளிச்சமாகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பத்து வருடங்கள் மட்டுமே வாழ்நதார்கள். இந்தக்கால எல்லைக்குள் முஸ்லிம்களிடம் தஃவாச்செய்து கொண்டிருக்கவில்லை. மாறாக ஏனையவர்களிடம் தஃவாவை எத்திவைப்பதற்கே குழுக்களை அனுப்பி வைத்தர்கள். இன்று எமது அமைப்புக்கள் முஸ்லிம்களிடம் தஃவா செய்வதாக குர்ஆன் ஹதீதுக்கு சொல்லி தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். தஃவா என்ற சொல் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய அறிவின்பால் அழைக்கும் சொல்லாகும். முஸ்லிம்களுக்கு தொழுகை, ஈமான், தவ்ஹீத் போன்றவற்றை கற்றுக்கொடுப்பதற்கு தஃலீம் என்றே குறிப்பிடப்படுகிறது. 

முஸ்லிம் அமைப்புக்கள் முதலில் முஸ்லிம்களை திருத்தி விட்டு பின்னர் மற்றவர்களிடம் செல்லப்போவதாக சுன்னாவுக்கு முரனாக செயற்படுகிறார்கள். நபியவர்கள் காலத்து மதினத்து முஸ்லிம்கள் மத்தியலும் தவறுகள், பொடுபோக்குகள் இருக்கத்தான் செய்தன. இருந்தும் நபியவர்கள் முஸ்லிம்களை திருத்தி முடிக்க வேண்டும் என்றிருக்கவில்லை. மாறாக கொஞ்ச நேரம் முஸ்லிம்களுக்காகவும் பெரும்பாலான நேரங்களை மற்றவர்களுக்குமாகவே செலவு செய்தார்கள். 

இந்த உண்மைகளை உணராமல் எமது ஜமாஅத்துக்கள் தமது நேரத்தையும், பணத்தையும் வீணடித்ததன் பிரதி பலன்தான் தொழுகைகளால் சமூகங்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றன என மாற்று மதத்தவர்கள் பிழையாக விளங்கியமையாகும். முஸ்லிம்கள் மத்தியில் எமது ஜமாஅத்துக்கள் தங்களது வீரத்தனத்தையும், பிரசங்கித்தனத்தையும் காட்டினார்களே தவிர அழகிய முறையில் மற்றவர்களிடம் செல்லாததன் விளைவை இன்று முஸ்லிம் சமூகம் அனுபவிக்கிறது. இந்த ஜமாஅத்துக்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை முடியுந்தருவாயில் உள்ளது. 

ஆகவே இவற்றுக்கான முழு பொறுப்பையும் எமது ஜமாஅத்துக்கள் ஏற்பதோடு இனியாவது தங்களது நேரத்தையும், காலத்தையும், முயற்சிகளையும் முஸ்லிம்கள் மத்தியிலேயே சுற்றிவருவதற்கு பாவிக்காமல் ஏனைய சகோதரர்களுக்கு சத்தியத்தை விளக்க முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.